ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது, இருதரப்பு உறவில் நேர்மறையான மாற்றமொன்றின் புள்ளியாக அமையும் – என்று இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோஹன் குவத்ரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எனது இக்குறுகிய விஜயத்தின்போது எங்களால் சாதிக்க முடிந்த விடயங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகின்றேன். நேற்றைய தினம் இரவு இங்கு வருகை தந்த நான் இன்று காலை வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதி ஆகியோரை சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன்.
அத்துடன் வெளியுறவுத்துறை செயலாளருடனும் சந்திப்பினை மேற்கொள்ள முடிந்தது. மதிய உணவு விருந்துபசாரத்தின் பக்க நிகழ்வாக குறிப்பிட்ட சில அமைச்சர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதே எனது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இலங்கை தலைமைத்துவத்துடனும் அதேபோல வெளிவிவகார அமைச்சுடனும் இன்று காலை நடைபெற்றிருந்த பேச்சுகள், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயமானது இருதரப்பு உறவில் நேர்மறையான மாற்றமொன்றின் புள்ளி என்பதனை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்தன.
அத்துடன் இந்த விஜயத்துக்கு முன்னதாக எம்மால் முன்னெடுத்துச்செல்லக்கூடிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முக்கிய விடயங்கள், விஜயத்தின் போதான செயற்பாடுகள், இலங்கை தலைமைத்துவத்தின் முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், உறவுகள் தொடர்பாக எமது தலைமைத்துவத்தின் நோக்கு, உறவின் பலம், உறவினை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பின் பல்வேறு கூறுகள், இந்தியாவும் இலங்கையும் அனுபவிக்கும் பொருளாதார பங்குடைமை முழுவதும் எதிர்வரும் ஆண்டுகளில் காணப்படும் முக்கிய கூறுகள். தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
நான் கூறியதைப் போலவே, இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் வெற்றியினை உறுதிப்படுத்துவதே எமது பிரதான இலக்காகும். அவர் நன்கறியப்பட்ட ஒரு தலைவர் என்பதுடன் உறவுகளுக்கு மிகவும் வலுவாக ஆதரவளிப்பவர். கடந்த 14 முதல் 16 மாதங்களில் இலங்கை எதிர்கொண்டிருந்த பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் நாம் மிகுந்த ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளோம். மேலும், அவருக்காக மிகவும் அன்பான வரவேற்பளிக்க இந்தியா காத்திருக்கின்றதென என்னால் உறுதியாக கூற முடியும்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம், மேலும் அவரது விஜயத்தை வெற்றிகரமான ஒன்றாக மாற்றவும் அவ்வழியில் எங்கள் உறவை வெற்றியடையச் செய்யவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.










