” இலங்கையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான யோசனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டு நிலைவரம் பற்றி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என நம்புகின்றோம்.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.
இதன்போது ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எமது நிலைப்பாடும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பாதுகாத்துக்கொள்வதற்காக எமது தரப்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன கலந்துரையாடினர் என்பது தொடர்பில் எமக்கு தகவல் தெரியாது. இலங்கையின் எதிர்கால திட்டம் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மூவின மக்களும் சகோதரத்துடன் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் கண்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் இதனை உணர்த்திருப்பார்கள். எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நம்புகின்றோம்.” – என்றார்.










