இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் காணாமற்போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
தப்பியோடிய கைதிகள் சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதன் பிரகாரம், கைதிகள் 0114 677 177 அல்லது 0114 677 517 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, வட்டரெக்க சிறைச்சாலையில் இருந்த 181 கைதிகள் வேலைத்திட்டமொன்றுக்காக விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லும் போது, அவர்கள் பயணித்த பஸ் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் இதன்போது 58 கைதிகள் தப்பிச் சென்றதாகவும் அவர்களில் 32 பேர் இதுவரை சரணடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.