இந்தியாவின் தலை சிறந்த நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி, 30 கிலோ மீற்றர் தூரமான பாக்கு நீரிணையை நேற்று நீந்தி சாதனை படைத்தார்.
வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் இணைந்து இச்சாதனை முயற்சியை நேற்று மன்னாரில் ஆரம்பித்துவைத்தனர்.
இச்சாதனையை புரிவதற்கு 13 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களையும் அவர் எடுத்துக்கொண்டார்.
நேற்று 19 ஆம் திகதி மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தனுஷ்கோடியை சென்றடையும் சாதனை முயற்சியை ஆரம்பித்த சியாமளா, 47 வயது நீச்சல் வீராங்கனையாவார்.
உலகளவில் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இரண்டாவது பெண்மணியாகவும், 13 வது நீச்சல் வீரராகவும் அவர் திகழ்வார். ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக் கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார்.
அப்போது தினபதி சிந்தாமணியின் ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.