திருமலை அபிவிருத்தில் டில்லியின் பங்களிப்பு காலத்தின் கட்டாயத் தேவை

“ உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.”

இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அறிவித்துள்ளார்.

இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இந்திய தூதுவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கும், வளர்ச்சிபாதை நோக்கி நகர்வதற்கும் மேற்படி நான்கு விடயங்களும் பிரதானமானவை. தவிர்க்க முடியாதவை. எனவே, காலத்தின் கட்டாய தேவையாக உள்ள மேற்படி விடயங்களுக்கு கொழும்புக்கு, டில்லி எப்போதும் கைகொடுக்கும் என்ற உத்தரவாதத்தையே மறுபடியும் தமது நாட்டு தூதுவர் ஊடாக இந்தியா வழங்கியுள்ளது என்றே இவ்விவகாரத்தை நாம் அணுக வேண்டும். வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள முற்பட வேண்டும்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் முதலீடுகளைத்தவிர இதர உதவிகளை முந்திக்கொண்டு – எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்கிய நாடுதான் இந்தியா. ஆக சொல்லில் அல்லாமல் தனது வகிபாகத்தை அது செயலிலும் நிரூபித்துக் காட்டியுள்ளமை இலங்கையர்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கின்றது.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கும் இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. இன்றளவிலும் வழங்கிவருகின்றது. இவற்றில் ரயில் பாதைகள் புனரமைப்பு வேலைத்திட்டம் பிரதானமானது. அதேபோல 50 ஆயிரம் வீட்டு திட்டம். மீள்குடியேற்றம் என இந்தியா வழங்கிய உதவிகளால்தான் வடக்கு, கிழக்கு துரிதமாக அபிவிருத்தி கண்டன எனக் கூறினாலும் அது மிகையாகாது.

இவ்வாறு இந்தியாவின் உதவியுடன் இலங்கை முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையை இலங்கையின் வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கும், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாகவும் அதனை மேம்படுத்துவதற்கும் டில்லியுடன் இணைந்து செயற்படுவதற்கு கொழும்பு விரும்புகின்றது.

“ இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி, போக்குவரத்து, துறை முகம், கப்பற்துறை, விமானம் , கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் இலக்குடன் கூடிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 24 ஆம் திகதி, திருகோணமலை விமானப்படை தளத்தில் , திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகளும் ஏற்கனவே ஆரம்பமாகி, வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றன.

திருமலை துறைமுகம் இயற்கை துறைமுகமாகும். தெற்காசியாவில் கேந்திர முக்கியத்துவம்மிக்க பகுதியாகும். கடல் பயணத்தில் முக்கிய நிலையமாகவும் திகழ்கின்றது. அந்த வளாகத்தில் இந்தியாவின் எண்ணெய் குதங்கள் உள்ளன. இலங்கைக்கு உரித்தானவையும் அங்கு உள்ளன. பல தசாப்தகாலமாக இந்தியா அங்கு செயற்படுகின்றது, ஆனால் இலங்கையின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடுக்கு எதிராக அது ஒருபோதும் செயற்பட்டது கிடையாது. இன்றளவிலும் இலங்கை எரிபொருள் சந்தைக்கு இந்திய ஐஓசி நிறுவனம் சிறந்த பங்களிப்பை வழங்கிவருகின்றது.

அதேபோல பலாலி விமான நிலையம் விவகாரத்திலும் இலங்கை மக்கள் பக்கம் நின்று இந்தியா முடிவுகளை எடுத்துவருகின்றது. விமான நிலைய மேம்பாட்டுக்காக முதலீடுகளை செய்யவும் எதிர்பார்க்கின்றது. எனவே, இந்தியாவின் உதவியுடன் திருகோண மலையை வலுசக்தி மற்றும் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை முற்போக்கு சிந்தனையாகவும், நாட்டின் பொருளாதார நலனை கருதியும் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்க வேண்டும்.

இது விடயத்தில் ஒளிவு மறைவு இருக்க முடியாது. அமைச்சரவை, நாடாளுமன்றம் என முக்கிய கட்டங்களை தாண்டியே திட்டங்கள் அமுலுக்குவரும். இத்திட்டத்தால் கிழக்கு மாகாணம் மட்டும் அல்ல இலங்கையில் சில பிரச்சினைகள் தீரக்கூடும். எனவே, குறுகிய அரசியல் நலன்களுக்காக வீண் விமர்சனங்களை முன்வைக்காமல், திட்டத்தில் உள்ள நல்ல பக்கங்களை பார்த்து, அதற்கு ஆதரவளிப்பதே பொருத்தமான அரசியல் நகர்வாக அமையும்.

இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் 1990 சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவை ஆரம்பமாவதற்கு முன்னர் அது தொடர்பில், அரசியல் நோக்கத்துக்காக தவறான கோணத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கையை இந்தியாவின் கொலனியாக்கும் நகர்வின் ஓர் அங்கமே என்றெல்லாம்கூட கதைகள் பரப்பட்டன. ஆனால் 1990 சேவையால் பல இலங்கையர்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியிலும் இந்த சேவையை எல்லா வகையிலும் கைகொடுத்தது.
திருமலை அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வரலாம். அரசியல் நோக்கங்களுக்காக, ஆனால் அதனை செயற்படுத்திய பின்னர் அதன்மூலம் இலங்கை மக்களே நன்மை அடைவார்கள் என்பதை காலம் உணர்த்தும். குறைகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்டி, திட்டத்தை நிறைவானதாக மாற்றலாம். அதுவே தற்போதைய இலங்கைக்கு தேவை. மாறாக அதைவிடுத்து வேறு கோணத்தில் கருத்துகள் பரப்பட்டால் அது இலங்கையின் எதிர்காலத்துக்கே தாக்கமாக அமையும்.

Related Articles

Latest Articles