தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ராணி தோட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் – ஜீவன் உறுதி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரவுண்ஸ்விக் குரூப் ராணி தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று பார்வையிட்டதுடன், விரைவில் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரவுண்ஸ்விக் குரூப் ராணி தோட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 20 வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. இதனால் 20 குடியிருப்புகளை சேர்ந்த 79 பேர் நிர்க்கதியாகினர்.

இதனை தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இ.தொ.கா வின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான பல்வேறு அடிப்படை தேவைகளை மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவரின் ஊடாக மேற்கொள்ளுமாறு பிரதேச சபை தலைவருக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்தோடு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு விரைவாக வீடுகளை அமைத்து கொடுப்பதற்கும், இந்த 20 வீடுகளில் தங்கி இருந்த திருமணமான அனைத்து குடுபங்களுக்கும் தனி வீடுகளை அமைத்து தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இவ்வீடுகளை அமைப்பதற்கான உரிய இடத்தினை தெரிவு செய்து தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின் பின்னர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவாக வீடுகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ராணி தோட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுப்பதற்கும் மஸ்கெலியா பிரதேச சபை தலைவருக்கு அமைச்சர் பணிப்புரைவிடுத்தார்.

Related Articles

Latest Articles