‘தீர்வு தராத கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம்’ – அனுசா விளாசல்

சம்பள உயர்வுக்கு அப்பால் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு தராத எந்த ஒரு கூட்டு ஒப்பந்தமும் நிச்சயமாக அடிமை சாசனமாகவே அமையும் என்று சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி செயலாளர்நாயகமும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

“கூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வுவோடு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல எமது தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் அதில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

ஒவ்வொரு தோட்டங்களிலும் எமது மக்கள் வெவ்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டால் வேறு ஒரு பிரச்சினை அதைவிடவும் பயங்கரமாக உருவாகிவிடுகிறது. கொழுந்து நிருவையில் இருந்து அவர்கள் ஓய்வூதியம் பெறும் வரையிலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையே வாழ்ந்துவருகிறார்கள்.

டிஜிட்டல் முறையில் 100 கிராம் குறைந்தாலும் பெயர் குறைப்பு கொழுந்து நிலுவையில் அளவுக்கதிகமான நிறை கழிவு நவீனமயப்படுத்துதல் என்ற ரீதியில் வேலை நாள் குறைவு போன்ற நெருக்கடிகளினால் இவர்களின் உழைப்பு அர்த்தமின்றி வஞ்சிக்கப்படுகின்றது.

இதற்கு எதிராக சரத்துக்களும் கூட்டு ஒப்பந்தத்தில் அழுத்தமாக இணைக்கப்பட வேண்டும்

குளவி கொட்டுதலாலும் வனவிலங்குகள் தாக்குதாலும் வேறு விபத்துகளினாலும் வேலை நேரத்தில் மரணிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈடும் அதுபோல் வைத்திய சிகிச்சை முடிந்து மீண்டும் கடமைக்கு திரும்பும் உடல் தகுதியை பெறும் வகையிலான காலங்கள் மருத்துவ விடுமுறை நாட்களாக கணிக்கப்பட வேண்டும் , அதற்கான நட்ட ஈடுகளும் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும்.

வறட்சி காலங்களில் ஒரு நாள் பெயருக்காக எடுக்கப்படவேண்டிய கொழுந்தின் நிறை குறைக்கப்பட வேண்டும்.

தற்போது வழங்கப்படும் 500 கிராம் தேயிலை தூள் தரமான ஒரு கிலோவாக அதிகரிக்கப்படவேண்டும் உரிய விசாரணை இன்றி அல்லது ஆகக் குறைந்தது ஏழு நாள் அவகாசம் இன்றி தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தக் கூடாது.

தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகமும் நீதிமன்றமும் இரண்டு தண்டனைகள் வழங்கக்கூடாது தற்போது ஒரு குற்றத்திற்காக நிர்வாகமும் தண்டிக்கிறது நீதிமன்றமும் தண்டிக்கிறது நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னர் அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

தோட்டங்கள் காடாக்கப்படாமல் உரிய முறையில் பராமரிக்கப்படல் வேண்டும்.

Annual muster எனப்படும் வருடாந்த ஆல் கணக்கெடுப்பு காலை 7 மணிக்கு அல்லது மாலை 5 மணிக்கு என்று அடிமைகளை கணக்கெடுப்பது போல் அல்லாமல் கௌரவமான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

சம்பள உயர்வு ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வுக்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டும்.கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது தாமதமாகும் காலத்திற்குரிய கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.”  என மேலும் தெரிவித்தார்

Related Articles

Latest Articles