நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் இருந்து விலகுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் பின்னரே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் தலைமைப்பதவி மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
இந்நிலையிலேயே அந்த குழுவில் தாம் அங்கம் வகிக்கபோவதில்லை என ஐக்கிய மக்கள் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
மேற்படி குழுவுக்கு இரான் விக்கிரமரத்ன, அஸோக அபேசிங்ஹ, ஹர்ஷண ராஜகருண ஆகிய எம்.பிக்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சபாநாயகரால் பெயரிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










