நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட தமிழரசுக் கட்சியினர் மறுப்பு!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சாணக்கியன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மீதான நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை போதுமான அல்லது வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படாமை.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை.

நாட்டில் தற்போது பாரிய எரிபொருள் நெருக்கடி நிலவும் சூழலில், இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் ரீதியான குழப்பங்களை ஏற்படுத்தி, பொதுமக்களை மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கக்கூடும் என்ற அச்சம்.

இந்தக் காரணிகளின் அடிப்படையில், எதிர்க்கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கப் போவதில்லை எனத் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles