உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரின் மகனான சட்டத்தரணியொருவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உயிர் நீதிமன்ற பெண் சட்டத்தரணியொருவர் இன்று (25) கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த உயர் நீதிமன்ற பெண் சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிவந்துடுவ, தலகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த முறைப்பாட்டாளரான சட்டத்தரணியின் வீட்டு காணிக்குள் கடந்த 12 ஆம் திகதி சில சிறு பொதிகள் காணப்பட்டுள்ளன. இதை பார்த்த அந்த வீட்டின் பணிப்பெண் சட்டத்தரணியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இந்த சிறு பொதிகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் வளர்ப்பு நாய் வாயில் நுரை தள்ளியபடி மயக்கமுற்று கீழே விழுந்துள்ளது.
இதையடுத்து மிருக வைத்தியரொருவரை அழைப்பித்து நாயை பரிசோதனை செய்தபோது வைத்தியர் நாயின் உடலில் விஷம் ஏறியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்தபோது வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சிறு பொதிகளை வீட்டு தோட்டத்துக்குள் வீசியது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அந்த வாகனம் தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற பெண் சட்டத்தரணியின் வாகனம் என்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் பொலிசார் பெண் சட்டத்தரணியை இன்று (25) போலீஸ் நிலையம் வரும்படி அழைப்பு விடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற்று கெஸ்பாவ நீதமான நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
