பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பசறை இல.02. தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.வாசுதேவன் உடல் நலக்குறைவு குறைவு காரணமாக கொழும்பு வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இயற்கையெய்தினார்.
மீதும்பிட்டிய ஏ பிரிவை பிறப்பிடமாக கொண்ட இவர், தமது பெற்றோரைப் போலவே சமூக செயற்பாடுகளில் ஆர்வமுடன் செயற்பட்டு வந்தார். மீதும்பிட்டிய பகுதியில் வைட்ரோஸ் என்ற இளைஞர் கழகத்தை தாபித்து இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த உதவி புரிந்தார்.
பிளேன் இன்டர்நெஷனல் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இறுதியாக தான் அதிபராக கடமையாற்றிய அம்மனிவத்தை பகுதியில் அமுதம் மக்கள் அபிவிருத்தி மன்றம் என்ற சமூக நலன் மேம்பாட்டு அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆலோசகராக இருந்து காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இவர் ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம், மீதும்பிட்டிய இல.01. தமிழ் வித்தியாலயம் உட்பட பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு, தன்னுகை தமிழ் வித்தியாலயத்திலும் சில காலம் அதிபராக கடமையாற்றியுள்ளார். கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் அயற் பாடசாலைகளை அக்கறையோடு இணைத்துக் கொண்டு செயற்பட்ட வாசுதேவன் மாணவரின் கல்வி மேம்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
இவரது மறைவு கல்வி வலயத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கு பசறை வலய அதிபர்கள் சார்பில் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பசறை நிருபர்
