பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு

பாகிஸ்தான் சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில், புனரமைப்புக்கு பின் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட, கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர் என்ற அந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லவும், சடங்குகள் செய்யவும் வசதியாக, அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன என சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்களைக் கவனிக்கும் அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் அமீர் ஹஸ்மி நேற்று தெரிவித்தார்.

அந்த கோவிலின் நிர்வாகம், ஓர் உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் முழுவதும் பல இந்து கோவில்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில், சியால்கோட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷாவல தேஜா கோவிலும் அடங்கும் என்று அமீர் ஹஸ்மி கூறினார். பெஷாவரில் உள்ள இந்து கோவில்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையின சமூகத்தினராக இந்துக்கள் உள்ளனர். அரசு புள்ளிவிவரத்தின்படி அங்கு 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர், சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles