புதிய அரசமைப்பு வரும்வரை மாகாணத் தேர்தல் வேண்டாம்!

புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறந்த முடிவாக அமையும் – என்று இராஜங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஆட்சியின்போது மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டன. இதற்கு எதிராக எமது அணியினர் விமர்சனங்களை முன்வைத்தனர் என்பதுடன் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் பிற்போடப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினர்.

அப்படியானால் தற்போது தேர்தலை நடத்தும் பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இது பற்றியே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டிருக்கலாம்.

அத்துடன் மாகாணசபை முறைமை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.குறிப்பாக  எமது அணிக்கு ஆதரவு வழங்கியவர்களில் சிலர், மாகாணசபைகள் வெள்ளை யானை எனவும், அவை இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்டவை எனவும் வாதிட்டுவருகின்றனர்.

தற்போது புதியதொரு அரசியலமைப்பை இயற்றும் பணி இடம்பெற்றுவருகின்றது. தேர்தல் முறைமை குறித்து அதில் முடிவு எடுக்கப்படும். நிர்வாக முறைமையும் தீர்மானிக்கப்படும். எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறப்பு.” – என்றார்.

Related Articles

Latest Articles