ஹட்டன்,குயில்வத்தை பகுதியில் சுமார் 1,480 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அப்பகுதியில் தற்போது மூன்று மதுபானசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் மேலுமொரு மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குயில்வத்தை பிரதேச மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இப்போராட்டம் இடம்பெற்றது.
மலையக வளர்ச்சியை மண்ணில் புதைக்காதே, லாபம் தேடும்; முதலாளிகள், மதுவால் பாடசாலை சமூகத்தை அழிக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்ட காரர்கள் குறித்த பிரதேசத்தில் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் மிகவும் பிரசித்த பெற்ற சிவன் ஆலயம் ஒன்றும் இருப்பதாகவும் இந்நிலையில் இந்த மதுபானசாலை அமையப்பட்டால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்பதாகவும் அத்தோடு கலாசார சீரழிவும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே நேரம் பாடசாலைகளுக்கும் வழிபாட்டுத்தளங்களுக்கும் அருகாமையில் மதுபானசாலை அமைப்பதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகின்றது இது திட்டமிட்டு இன முறுகலையும்.சமூகத்தையும் அழிப்பதற்கான நடவடிக்கையா என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதே வேளை கடந்த வருடம் முதல் இது வரை இந்த பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களின் போராட்டங்கள் காரணமாக அந்த நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டன.










