புஸல்லாவை, எல்பொட தோட்டத்தில் டீசல் பௌசர் விபத்தில் சாரதி பலி!

புஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05.11.2022) அதிகாலை ‘எரிபொருள் கொல்கலன்’ வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.பி. துசிந்த (வயது – 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கம்பளை – புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான 6600 லீற்றர் டீசலை வழங்கிவிட்டு, கம்பளை நோக்கி திரும்பும் வழியிலேயே அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பௌசரில் எஞ்சியிருந்த டீசல் வெளியேறி பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பௌசருக்குள் சாரதியும், உதவியாளரும் இருந்துள்ளனர். சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால், வீதியல் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த பௌசரில் 13200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ – புரட்டொப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles