” பெருந்தோட்ட மக்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், தோட்டப் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களாக பயிற்றுவிக்கும் பயிற்சிப் பல்கலைக்கழகமொன்றை கொட்டகலை பிரதேசத்தில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
” தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை மேற்பார்வை செய்யும் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இவ்வாறான அனைத்து விடயங்களுடனும் அடுத்த வருடத்தில் இருந்து கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.” – எனவும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை , ” அடுத்த மாத நடுப்பகுதியில் உயர்தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடலாம் என நம்புகிறேன். இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கான அனைத்துப் பரீட்சைகளையும் குறித்த காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.” எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.










