பெரும்பான்மையை இழந்துவிட்டதா அரசு? பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ராஜபக்சக்களுக்கும் இடையிலான அரசியல் உறவு முறிந்துள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதா என்பதை எதிரணிகள் இன்று பரீசிலித்து பார்க்கக்கூடும் என தெரியவருகின்றது.

நாடாளுமன்றம் இன்று (06) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

தனி ஒருவராக நாடாளுமன்றம்வந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகி இருந்தாலும் ஆட்சியை முன்னெடுப்பதற்குரிய ஒத்துழைப்பை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வழங்கி வந்தது.
எனினும், மொட்டு கட்சி தற்போது பிளவுபட்டுள்ளது. அக்கட்சியின் 80 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் பக்கம் உள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

ஆனால் பெரும்பாலான எம்.பிக்கள் தமது பக்கமே உள்ளனர் என்று ராஜபக்ச தரப்பு கூறுகின்றது.

எது எப்படி இருந்தாலும் சில சட்டமூலங்களை சபையில் நிறைவேற்றிக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை (113) தேவை, ஜனாதிபதி ரணிலுக்கு தற்போது 100 வரையான எம்.பிக்களே ஆதரவு வழங்கியுள்ளனர்.

சிலவேளை எதிரணி எம்.பிக்களும், மொட்டு கட்சியின் ராஜபக்ச தரப்பும் ஆதரவு வழங்காவிட்டால் சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்வதிலும் சிக்கல் உள்ளது.

எனவே, ஜனாதிபதி ரணிலுக்குரிய நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று பரிசீலித்து பார்க்கக்கூடும் அல்லது அது தொடர்பில் விளக்கம் கோரக்கூடும் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles