சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, இன்று (01) காலை பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என சிங்கள இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியில் ஜனவரி 29 ஆம் திகதி இணைந்துகொண்ட தயா ரத்னாயக்கவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் ஆலோசகர் பதவியொன்றும் வழங்கப்பட்டது.
எனினும், தயா ரத்னாயக்கவை கட்சியில் இணைத்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஊடக சந்திப்பொன்றை நேற்று நடத்தி கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையிலேயே தயா ரத்னாயக்க மவ்பித ஜனதா கட்சி பக்கம் சென்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது. சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
மறுப்பு
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துகொண்டார் என வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
“ அவ்வாறானதொரு சம்பவம் நடக்கவில்லை, வெளியான தகவல்களில் உண்மை இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான சுஜிவ சேனசிங்க அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
