ஜனவரியில் திருமணம் செய்து கொள்ளவிருந்த தனது எதிர்கால மனைவியின் வீட்டிலிருந்த 8 லட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட மணமகனை பொல்பித்திகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொல்பித்திகம பொலிஸ் பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்ற வீடு உடைப்பு தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கொள்ளையிட்ட தங்க நகைகள் மற்றும் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
இந்தச் செய்தி பரவியதும் தமது வீடுகளில் கொள்ளையிட்ட பொருட்கள் இருக்கின்றனவா என பார்ப்பதற்கு பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர். தனது மகளின் 8 லட்ச ரூபா பெறுமதியான
தங்க நகைகளை பறிகொடுத்த பெண்ணும் பொலிஸ் நிலையம் வந்திருந்தார்.
சந்தேக நபர்களை பார்த்த அந்தப் பெண் அவர்களின் ஒரு நபர் தனது வருங்கால மருமகன் என்பதையும் அறிந்து கொண்டார்.
சந்தேக நபர்கள் போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் என்பதை அறிந்து கொண்ட அந்தப் பெண் சந்தேக நபரை பார்த்து இனிமேல் தமது வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என பொலிஸ் நிலையத்தில் வைத்தே எச்சரித்துவிட்டு வீடு திரும்பி சென்றார்.