(செய்தி : ராமு தனராஜா)
மண்சரிவு அபாயம் உள்ள கனவரல்ல மௌசாகலை பகுதியில் உள்ள சுமார் 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மௌசாகலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்போது தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் கனவரல்ல , கோணக்கலை ஆகிய பகுதிகள் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பெயது வரும் கடும் மழையினால் மேலும் மண்சரிவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
கனவரல்ல பகுதி மக்கள் இக்கட்டான சூழ்நிலை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து அவரது இணைப்பு அதிகாரி G.ஜெயச்சந்திரன் பசறை பிரதேச சபை உறுப்பினர் ஈசன் ஆகியோர் நேற்றைய தினம் (04/11) அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின ஆலோசனைக்கு அமைய இன்று காலை (05/11) பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை குறித்த அதிகாரிகள் செய்துகொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.