பட்டம் பறக்கவிட்டு விளையாடிய, இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்று, மரண பயத்தை காட்டிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை , புலோலி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான காணொளியும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில் பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர்.
அப்போது, இரண்டாவது பட்டத்தின் ‘முச்சை’ கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.
சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர். சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்துள்ளார்.










