” ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு கூடியவிரைவில் தீர்வை வழங்குவதற்காக முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.” – என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மலையக ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறும், தகைமையை பூர்த்திசெய்த நாளிலிலிருந்து அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தமிழ்ப்பாடசாலைகளில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை நாம் ஏற்கின்றோம். அங்கு உரிய கொள்கைத்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. முதலில் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்படவேண்டும்.
மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலேயே மலையக உதவி ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் மாகாண அரச சேவைக்கு உட்பட்டவர்களாவர். மத்திய அரசுடன் தொடர்பில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது கடந்தகாலம் தொடர்பில் கதைத்து பயன் இல்லை. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் முயற்சிப்போம். நிதி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கடந்த அரசாங்கம் உத்தரவிட்டிருந்தாலும் நிதி ஏற்பாடுகளை செய்துகொடுக்கவில்லை. அதற்காக நாம் இப்பிரச்சினையை விட்டுவிடமாட்டோம். இது முக்கியத்துமிக்க பிரச்சினை. கூடியவிரைவில் தீர்வைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.
