” மஹிந்த ராஜபக்ச என்ற தலைவருக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவரே மொட்டு கட்சியின் தலைமைப்பதவியில் தொடர்வார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது மொட்டு கட்சியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் புதிய சக்தியுடன் கட்சி பயணிக்கும் என்ற கருத்தையே ரஞ்சித் பண்டார வெளியிட்டிருந்தார். இதனை அடிப்படையாகக்கொண்டே தலைவர் பதவி பற்றி பேசப்பட்டது.
எமது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சதான். அவருக்கு மாற்றீடு இல்லை. அன்றும் இன்றும் என்றும் அவர்தான் எங்களுக்கு தலைவர்.” – எனவும் சாகர குறிப்பிட்டார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவிக்கான புதிய நியமனம் கட்சி யாப்பின் பிரகாரம் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.
