மஹிந்தவுக்கு ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று மொட்டு கட்சி உறுப்பினர்கள் கூறிவரும் நிலையில், அது தொடர்பில் எவ்வித புலனாய்வு அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் தூயகொந்தா அறிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அவரது பேச்சாளர்கள் உள்ளிட்டவர்கள் கூறிவரும் விடயம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியவை வருமாறு,

” இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
ட்ரோன் தாக்குதல் நடத்தப்படுவதாக இருந்தால் அது தொடர்பில் விசேட புலனாய்வு அறிக்கை இருந்திருக்க வேண்டும். அவ்வாறு எமக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கொள்கை அளவில் தீர்மானமொன்றை எடுத்துள்ளது. அதற்கமைய நாம் செயல்படுவோம். புலனாய்வு பிரிவின் அறிக்கைகள் எமக்கு எல்லாவேளைகளிலும் கிடைக்கப்பெறும். அவ்வறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கைகள் இடம்பெறும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவின் மதிப்பீடுகளுக்கமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles