மாகாண சபைகள் மிகவும் அவசியம்!

இலங்கையில் இன ஐக்கியம் மற்றும் உண்மையான நீதியை நிலைநாட்ட மாகாண சபைகள் இருப்பதன் அவசியத்தை எடுத்துரைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தினார் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூன்று நாள் அரச முறை பயணமாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றார். இந்தப் பயணத்தில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட பல்வேறு தரப்பினரை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நேற்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரு தரப்பு சந்திப்பை ஜனாதிபதி அநுரகுமார நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று மாலை புதுடில்லியில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

இதன்போது 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இருவருக்கும் இடையில் பேசப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி,

“தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல சந்தர்ப்பங்களில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தேர்தல் காலங்களில் அவர் இது குறித்து கூறியிருந்தார். வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில அவருக்கு ஆதரவு கிடைக்கப்பெற்றது.

தமிழ் மக்கள் தொர்பிலான விவகாரம் நீண்ட காலமாகப் பேசப்படும் பிரச்சினை. இரு தரப்பு பேச்சுகளில் இந்த விடயங்கள் தொடர்பில் சில விடயங்கள் பேசப்பட்டன.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எடுத்துரைத்ததுடன், இன ஐக்கியம் மற்றும் உண்மையான நீதிக்கு மாகாணகளின் அவசியம் தொடர்பிலும் அவர் வலியுறுத்தினார்.” – என்றார்.

Related Articles

Latest Articles