அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் தர்சன், சுலக்சன், திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகளான மா. இளஞ்செழியன், இராமகமலன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே 2013 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர் விளக்கத்துக்காக அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மூன்று அரசியல் கைதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஆஜராகியிருந்தார்.
குறித்த அரசியல் கைதிகளைக் கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தினார் என்று சர்ச்சை ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.










