மொட்டு கட்சிக்குள் ரணில் அலை: மேலும் ஒரு மாவட்டத்தை இழந்தது ராஜபக்ச அணி!

இலங்கை அரசியலில் தேசிய மட்டத்திலான தேர்தல்களின்போது வெற்றியை தீர்மானிக்ககூடிய பிரதான மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர ஆகியோர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டுவருகின்றனர்.

ரணில் ஒப்பரேஷனில் அநுராதபுரம், கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தனது ஆதிக்கத்தை இழந்துள்ள ராஜபக்ச படையணி, தற்போது கம்பஹா மாவட்டத்தையும் இழந்துள்ளது. அந்த மாவட்டத்திலும் தனது கொடியை ஜனாதிபதி ரணில் பறக்கவிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகூடிய வாக்காளர்களைக்கொண்ட கம்பஹா மாவட்டத்தில் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்கு 8 லட்சத்து 7 ஆயிரத்து 896 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. 65.76 சதவீத வாக்குகளுடன் 13 ஆசனங்களை மொட்டு அணி கைப்பற்றியது.

23.27 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு நான்கு ஆசனங்களும், 5.03 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – கூட்டணி கட்சி சார்பில்
நாடாளுமன்றத்துக்கு தெரிவான

1.லசந்த அழகியவன்ன

2.நலின் பெர்ணான்டோ

3.நிமல் லான்சா

ஆகியோர் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்திவிட்டனர்.

எனினும், மொட்டு கட்சி எடுத்த முடிவை மீறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு

4. பிரசன்ன ரணதுங்க,

5. உபுல் மஹேந்திர ராஜபக்ச,

6. சஹான் பிரதீப் விதான,

7.கோகிலா குணவர்தன,

8.மிலான் ஜயதிலக்க ஆகியோர் முன்வந்துள்ளனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அக்கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட
9. சிசிர ஜயக்கொடியும் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க பக்கம் நிற்கின்றார்.

10. நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேயும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியில் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட எம்.பிக்களில் இருவர் தீர்க்கமான அரசியல் முடிவை எடுக்கவுள்ளனர் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் கம்பஹா மாவட்டத்திலிருந்தே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. 1977 இல் நடைபெற்ற தேர்தலில் பியகம தொகுதியில் போட்டியிட்டே அவர் வெற்றிபெற்றார். அதன்பின்னரே கொழும்பு மாவட்டம் சென்றார்.

குறிப்பு – ( நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட பதிவு இது. எந்த அரசியல் வாதிக்கு வெற்றி என்பது வாக்காளர்களின் கையிலேயே தங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு கம்பஹா மாவட்டத்தில் 18 லட்சத்து 81 ஆயிரத்து 129 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் எந்த முடிவை எடுத்தாலும் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது செப்டம்பர் 22 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் ஊடாக தெரியவரும்.)

ஆர்.சனத்

Related Articles

Latest Articles