ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு இன்னும் உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்படவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு நேற்று முன்தினம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடியது.
இதன்போது தலைவர், பொதுச்செயலாளர், தவிசாளர், பொருளாளர் ஆகிய நியமனங்களுக்கு நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியது.
தலைவராக மஹிந்த ராஜபக்ச நீடிக்கின்றார். பொதுச்செயலாளர் பதவியிலும் மாற்றம் இல்லை. சாகர காரியவசம் அப்பதவியை வகிக்கின்றார். பொருளாளராக அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமாகவே உள்ளது.
பஸில் ராஜபக்ச தேசிய அமைப்பாளர் எனக் கூறப்பட்டாலும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் அவரின் பெயர் இல்லை. இரட்டைக் குடியுரிமை விவகாரத்தால் அவர் பெயரளவில் தேசிய அமைப்பாளராக செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
