” ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி தொடர்பில் இன்னும் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை.” – என்று அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து தேர்தலில் போட்டியிடுமா, அதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கென கொள்கையொன்று உள்ளது. அந்த கொள்கையின் அடிப்படையில் எமது பயணம் தொடரும். எமது பொருளாதாரக் கொள்கையுடன் உடன்படக்கூடிய கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம். மாறாக காலைவார முற்படும் கட்சிகளுடன் கூட்டு பயணத்துக்கு இனி தயாரில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டை நிர்வகிப்பதற்கு நாம் ஆதரவு வழங்கிவருகின்றோம். அவரின் தற்போதைய நிலைப்பாடுகளை நாம் ஆதரிக்கின்றோம். பொருளாதாரக் கொள்கை தொடர்பில் வேறுபாடு உள்ளது. அதில் இணக்கம் காணப்பட்டால் இணைந்து பயணிப்பதில் சிக்கல் இருக்காது.” – என்றார்.
