ராகலை தீ விபத்து – வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான ஐந்தாவது வழக்கு விசாரணை (06) காலை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இதன்போது மேற்படி சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் (வயது 27) நீதி மன்றத்தில் ஐந்தாவது முறையாகவும் ஆஜர் படுத்தப்படவில்லை.

அதே நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தேக நபரை பதுளையிலிருந்து அழைத்து வர முடியாத நிலையினை சிறைச்சாலை அதிகாரிகள் இம்முறையும் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இந்த நிலையில் நீதவான் சந்தேக நபருடன் ஸ்கைப் மூலமாகவே வழக்கு விசாரணையை நடத்தினார்.

ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இந்த தீப்பிடிப்பு சம்பவம் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் (07.10.2021) அன்று இரவு இடம்பெற்றது.

இந்த விபத்து சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் மதுபோதையில் இருந்த குறித்த குடும்பத்தை சேர்ந்த தங்கையை இரவீந்திரன் வயது (27) என்பவர் உயிர் தப்பியிருந்தார்.

Related Articles

Latest Articles