“ தோட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றபோகின்றார்களாம். லயன்களையே கிராமங்களென அடையாளப்படுத்தி மக்களை ஏமாற்றும் மற்றுமொரு வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.”
இவ்வாறு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,
“ தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்தான் இந்த அரசுக்கு மலையக மக்கள் நினைவுக்கு வந்துள்ளனர். தோட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றபோகின்றார்களாம்.
மலையகத்தில் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் முற்போக்கு கூட்டணி புதிய கிராமங்கள் என்ற அமைச்சை உருவாக்கியது. அதற்கான அதிகார சபையை உருவாக்கியது.
ஆனால் இன்று மாடி லயன் திட்டம்போல உள்ள லயன்களையே கிராமங்களென அடையாளப்படுத்தி மக்களை ஏமாற்றும் மற்றுமொரு வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை. அவர்களுக்குரிய உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை. வறுமை நிலை அதிகரித்துள்ளது. சம்பளம்கூட அதிகரிக்கப்படவில்லை. ஆனால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஒருவர் கூறுகின்றார். வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதேதவிர சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை.
பெருந்தோட்ட மக்களின் துன்பநிலையை சுட்டிக்காட்டி அவற்றுக்கு தீர்வுகேட்டபோது அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எனக்கு பாடம் கற்றுத்தருகின்றேன் எனக்கூறி குறைகூர ஆரம்பித்தார். கல்வி அமைச்சராக அவர் இருக்கும் காலப்பகுதியில் பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் கல்விசார் பிரச்சினைகளைத் தீர்க்க எடுத்துள்ள நடவடிக்கைகள் எவை?
அதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மலையக அமைச்சர் சபையில் நேற்று சுட்டிக்காட்டி இருந்தார். முகாமையாளர்கள் தொழிலாளர்களை போத்தலில் தாக்குகின்றனர், வீடுகள் உடைக்கப்படுகின்றன, அத்துமீறல்கள் இடம்பெறுகின்றன என்றெல்லாம் கூறி இருந்தார்.
அவர் ஓர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர். ஜனாதிபதியுடன் இருப்பவர். எனவே, அரச பலத்தை, அமைச்சு பதவியை பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சாதாரண ஒருவரைபோல முகாமையாளருடன் சண்டைபிடிக்கும் நிலைக்கு நீங்கள் வீழ்ந்திருப்பது வேடிக்கையானது.
2015 இல் நாங்கள் நல்லாட்சியில் இருக்கின்றபோது அரச பலத்தை, கெபினட் பலத்தை பயன்படுத்தி இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுத்தோம். பொலிஸ் நிலையங்களில் அநீதி இடம்பெறாமல் இருப்பதை கட்டுப்படுத்தினோம்.
எனவே, மலையக இளைஞர்களை அடிதடி அரசியலுக்கு பதிகடாவாக்க வேண்டாம். ஆளுமையை வளர்த்துக்கொள்ளுங்கள். கருத்தியல் அரசியலுக்கு கருத்து ரீதியாகவே பதிலடி கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்” – என்றார்.