அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, 2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்களின் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் இன்றளவிலான முன்னேற்றம் யாது? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியவை வருமாறு,
” 2011 டிசம்பர் 9ஆம் திகதி லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமல்ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்துக்கு 2011 டிசம்பர் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் 17 சந்தர்ப்பங்களில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக தகவல்களை வழங்கியுள்ளார்.
இறுதியாக 2014 ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றம்கூடியவேளை, வழக்கினை ஒரு பக்கம் வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் இல்லாமையினால் , விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரால் 2025 ஜுன் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதே திகதியில் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பட்டது. அச்சுவேலி பொலிஸ் நிலையம், யாழ். குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த திணைக்களத்தால் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவினால் தற்போது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” – என்றார்.
