வடகொரியா நிலைமையை தோற்றுவிக்க என்பிபி முயற்சி: பதறுகிறது மொட்டு கட்சி!

இலங்கையில்    வடகொரியாவின்    நிலைமையை தோற்றுவிப்பதற்கு ஆளுங்கட்சி முயற்சித்துவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே அடக்குமுறை தலைதூக்கியுள்ளது     என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா    பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற வகையிலேயே எமது கட்சி,    ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்றது. கட்சியின் சார்பில் செயலாளர் என்ற அடிப்படையில் நான் பங்கேற்றிருந்தேன்.
எமது கட்சிக்குரிய தனித்துவங்கள் மற்றும் கொள்கைகளை பாதுகாத்தபடியே நாம் பயணிக்கின்றோம்.

எனினும்,    நாட்டில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல கட்சி முறைமையை இல்லாதொழித்து, எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களை ஒடுக்கி,  வடகொரியாவில்போன்று ஜனநாயகம் அற்ற சூழ்நிலையை      இங்கு ஏற்படுத்துவதற்கு பாரிய முயற்சி இடம்பெறுகின்றது.

இதற்கு ஓர் அங்கமாகவே அடக்குமுறை தலைவிரித்தாடுகின்றது. தமது கட்சி அலுவலகத்தில் இருந்தவர்களை பொலிசுக்கு நியமித்து, தமது தேவைக்கேற்ப பொலிஸாரை பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். எனவேதான் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் எதிரணிகள் ஒன்றுபட்டுள்ளன.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles