இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் அமரர் அருள்சாமியின் இரண்டாவது சிரார்த்த தினம் இன்றாகும்.
தனது 16 வயதில் இ.தொ.காவில் கால் பதித்தவர் அமரர் அருள்சாமி. இ.தொ.காவில் இணைந்து கொண்ட அருள்சாமி தனது இறுதிக் காலம் வரை தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக உழைத்தார்.
43 ஆண்டுகள் அரசியல், தொழிற்சங்க பணிகளில் சேவையாற்றி வந்த அமரர் அருள்சாமி அமரர் தொண்டமானின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்.
1977ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் போட்டியிட்ட வேளையில், அவரது வெற்றிக்கான உழைத்தவர். மலையக சமுதாயதுக்காக இறுதி வரை அவர் பாடுபட்டார். மனிதத்துவம் என்ற ரீதியில் சிறியோரையும் பெரியோரையும் சமமாக உயர்ந்த நிலையில் மதிக்கும் உயரிய பண்பு இவரிடம் நிறையவே காணப்பட்டது.
மும்மொழியிலும் சரளமாகப் பேசக் கூடிய புலமையைப் பெற்றிருந்தவர் அவர். தொழிற்சங்க போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய செயல் வீரர் எனலாம்.
மத்திய மாகாணத்தில் 1988ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அடுத்து வந்த மாகாணசபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக பணி புரிந்தவர். இக்காலத்தில் மலையக பாடசாலைகளின் அபிவிருத்தியில் அர்ப்பணிப்புடன் உழைத்தவர் அருள்சாமி.
2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதேசத்திற்கான இணைப்பு பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
காத்திருப்பு பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்தவராக அங்கம் வகித்தவர். இ.தொ.கா தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் 2018ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வின் போது தன்னை முழுமையாக அர்ப்பணித்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க பாடுபட்டவர்.
கலை, கலாசார ரீதியாகவும், சமூக மேம்பாட்டு விடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றார்.
இ.தொ.கா வின் வளர்ச்சியில் அருள்சாமிக்கு பெரும் பங்கு உண்டு. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அஹிம்சை வழியில் அமைதியாக போராடினால் வெற்றி கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டியவர் அமரர் அருள்சாமி.
தொழிற்சங்கத் துறையில் மனிதரில் மாணிக்கமாக அமரர் அருள்சாமி விளகுகின்றார். அவர் மறைந்து இரு வருடங்கள் சென்றாலும், அன்னார் முழு மலையக மக்களின் உள்ளங்களில் என்றுமே வீற்றிருக்கின்றார்.
இ.தொ.காவின் ஊடகப் பிரிவு










