கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
தான் தேசிய மக்கள் சக்தியில் இருப்பதால் தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறித்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
தான் வகுப்பறைக்குள் செல்வதல்லை எனவும், மாணவியை திட்டியதாகக் கூறப்படும் தகவல் பொய் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நான் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றேன். என்னை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் சின்னமும் பயன்படுத்தப்படுகின்றது. கட்சிக்கு சேறு பூசும் திட்டமும் இதன் பின்னணியில் உள்ளது. வேறு கட்சிகள் இதற்கு பணம் செலவிடுகின்றது. அதேபோல போட்டி நிறுவனங்கள்கூட இதன் பின்னணியில் இருக்கக்கூடும்.” – எனவும் அவர் கூறினார்.