அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் நாளை போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நாளை ஹட்டன் நகரில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டன் நகரில் நாளை 6 ஆம்திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம் பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் , மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, தொடர் மின் வினியோக துண்டிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடு இவற்றின் காரணமாக மலையக மக்களும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் அவற்றை சுட்டிக்காட்டி நாளை அட்டன் நகரில் இடம்பெற உள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்தியமான சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles