பெருந்தோட்ட பாடசாலைகளுக்கென 3 ஆயிரத்து 173 பேர் ஆசிரிய உதவியாளர்கள் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஒரு பிரிவினர் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு பிரிவினர் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாமலேயே, தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இவர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுப்பீர்களென, பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றேனென்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், ஊவா ஆளுனரைக் கோரியுள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் ஊவா ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மிலுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே, மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அக்கடிதத்தில்
“‘ ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு பாடநெறிகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிபந்தனைகளை நிறைவு செய்த ஒரு பிரிவினர்,அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து, ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டுமுள்ளனர். மேலுமொரு பிரிவினர், மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, அதற்குரிய ஆவணங்கள் அனைத்தையும், வலயக் கல்விக் காரியாலயங்கள் ஊடாக, ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியிருந்தும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இவ்வகையில், ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் தாமதப் போக்கினால், ஆசிரிய உதவியாளர்களில் ஒரு பிரிவினர், இதுவரை ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாமலும், நிரந்தரமாக்கப்படாலும் இருந்து வருகின்றனர்.
இத்தகைய ஆசிரிய உதவியாளர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை மட்டும் பெற்று, பல்வேறு பொருளாதார நெருக்கடி மத்தியில், பல வருடங்களாகவே இருந்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமனங்களைப் பெற்ற இவர்கள், விடுக்கப்பட்டிருந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தும், இதுவரை அவர்களுக்கு நியாயம் கிட்டவில்லை.
ஆகவே, தயவு செய்து பாதிக்கப்பட்டிருக்கும் இவ் ஆசிரிய உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கி, அவர்களை நிரந்திரமாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வீர்களென்று எதிர்ப்பார்க்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை










