இந்த அரசால் முடியா! பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்து!!

” தற்போதைய ஆட்சியின்கீழ் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, புதிய ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்களும் நாமும் எதிர்பார்த்த வரவு – செலவுத் திட்டமாக இது அமையவில்லை. விவசாயிகள் உட்பட விசேடமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. அதாவது ” காகத்தின் கூட்டில் முட்டையிட்டுள்ள ‘ரணில்’ எனும் குயிலுக்கு , சரியான கொள்கையை செயற்படுத்த முடியாது – விழுந்த பொறிக்குள் இருந்து மீண்டெழ முடியாது என்பதையே பட்ஜட் எடுத்துகாட்டுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்த ஆட்சியால் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. அவ்வாறு நம்புவது கனவாகும்.

உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார். அன்றைய நாளில் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தால் செலவின்றியே பொதுத்தேர்தலையும் நடத்திவிடலாம்.

ஏனெனில் புதிய ஆட்சி அவசியம். அதனை தெரிவுசெய்வதற்கான உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். நாம் ஜனாதிபதி தேர்தலை கோரவில்லை. ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரம் தெரிவானர். பொதுத்தேர்தலை அவசியம்.” – என்றார்.

2023 பெப்ரவரி பிறகு நாடாளுமன்றத்தை கலைக்ககூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles