“இப்படியே போனா பந்துவீச ஆட்களே இருக்க மாட்டாங்க”

கிரிக்கெட் விளையாட்டு பேட்டர்களுக்கு சாதகமாக மாறிக்கொண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் பந்துவீச யாருமே இருக்க மாட்டார்கள் என முன்னாள் வீரர் அனில் கும்ளே அச்சம் தெரிவித்துள்ளார்.

20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட், 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டபோதே, அது பந்துவீச்சாளர்களின் உரிமையை பறிக்கிறது என்றும், இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் அழியும் நிலைக்கு செல்லும் என்ற அபாய குரல் எழுப்பப்பட்டது.

ஆனால் அதிரடியான பேட்டிங், எதிர்பாராத விதத்தில் மாறும் கடைசிநேர த்ரில்லர் போட்டிகள் மற்றும் சூப்பர் ஓவர்கள் கொண்ட பரபரப்பான முடிவுகள் என டி20 கிரிக்கெட் ஆனது ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனிலும் பேட்டர்கள் மலையளவு ரன்களைக் குவித்து வருகின்றனர். பந்துவீச்சாளர்களின் பந்துகள் நாலாபுறமும் சிதறடிக்கப்படுகின்றன. முன்பெல்லாம் 200 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்த நிலையில், தற்போது 200 ரன்கள் என்பது வெற்றிக்கு உத்தரவாதமில்லாத ரன்கள் என்றாகிவிட்டது. நடப்பு சீசனில் 250 ரன்களுக்கு மேலாக மட்டும் 8 முறை அடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே பந்துவீச்சாளர்களின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில்தான், பந்துவீச்சாளர்களும் கிரிக்கெட்டின் ஓர் அங்கம் என்று உணர வேண்டும் என்றும் கும்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “கிரிக்கெட்டில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுக்கும் சமவாய்ப்பு ஏற்படும் சூழலை கொண்டு வர வேண்டும். மைதானங்களில் பவுண்டரி தொலைவு அதிகரிக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக நீங்கள் டக் அவுட்டை ஸ்டாண்டிற்குள் நகர்த்தலா. இதனால் சில இருக்கைகளை இழக்க நேரிடும். ஆனாலும் செய்துதான் ஆக வேண்டும். எல்லோரும் பேட்டர் ஆகவே விருப்பப்படுகிறார்கள். பந்துவீச்சாளர்களும் கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த சமநிலை மிகவும் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.

 

 

Related Articles

Latest Articles