எவ்வித உள்நோக்கமும் இன்றி, இலங்கையின் வளங்களை குறிவைக்காமல் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் அரசு உறவை வலுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு,
“ அரபுலகுடன் இலங்கை கடந்தகாலங்களில் சிறந்த நட்புறவை பேணியது. இலங்கையின் அபிவிருத்திக்கு அரபுலகம் உதவிகளை வழங்கியது. வட்டி இல்லாத கடன்கூட வழங்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் பல பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி இலங்கை வருவது நல்லது.
எவ்வித உள்நோக்கமும், நிகழ்ச்சி நிரலும் இன்றி உதவிகளை வழங்கும் இவ்வாறான நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பலமாக அமையும். உதவிகள்மூலம் அந்த துறைமுகத்தை தா, இந்த துறைமுகத்தை தா என அவர்கள் கோரப்போவதில்லை.” – என்றார்.