தொழிற்சங்க, அரசியல் பேதங்களை மறந்து கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு பாடம் புகட்ட ஒன்றிணைவோம் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் இன்னும் பல உரிமைகளை,பெற்றுக்கொள்ள வழி வகுக்கும்.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நுவரெலியா அலுவலகத்தில் நேற்று ( 27) புதன்கிழமை நடைபெற்ற தோட்ட கமிட்டித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தில் சதாசிவம் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் படுகின்ற கஷ்டங்களையும் கம்பனிகளால் வஞ்சிக்கப்படுவதையும் பார்க்கின்ற பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இந்த கம்பனிகளின் அடாவடி தனத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் பாடம் கற்பித்து தொழிலாளர்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுப்பட்டு போராடுவதன் மூலமே தொழிலாளர்களின் உரிமைகளை பெறமுடியும்.
எனவே எதிர்காலத்தில் தொழிலாளர்களினதும் தோட்டங்களினதும் நிலைமையை மாற்றியமைத்து பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் தோட்டங்களைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் தலைமைகளும் ஒன்றுப்பட்ட சக்தியாக செயல்படும் பொழுது இந்த 1,000 ரூபா சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகுக்குமென கூறினார்.
