கம்பளையில் சிக்கிய கள்ளன் – நடந்தது என்ன?

கம்பளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் உதிரிப்பாகங்கள், பெட்டரிகள், டயர்கள் என்பவை திருடப்படுகின்றமை தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (14) அதிகாலை சந்தேகநபர் முச்சக்கரவண்டியொன்றின் டயர்களை கழற்றிக்கொண்டிருந்த போது, பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு, தூண் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டார்.

கம்பளை- அங்கம்பன பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அதிகாலை கொழும்புக்குச் செல்வதற்காக வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறிய போது, ஆட்டோவில் டயர்கள் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வேறொரு ஓட்டோவில் ஏறி தனது பயணத்தை ஆரம்பித்த போது,வீதியோரம் மோட்டார் சைக்கிளொன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆட்டோவில் பயணித்தவர் இறங்கி, அருகிலிருந்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களை அழைத்துள்ளார். அப்போது அந்த வீட்டுக்குள் தனது ஆட்டோ டயர் இருப்பதை கண்டு, பிரதேசவாசிகளுடன் இணைந்து அந்த வீட்டிலிருந்த நபரை பிடித்து, மின்சார தூண் ஒன்றில் கட்டிவைத்து, கம்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கம்பளை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக சந்தேக நபர் வாகன உதிரிப்பாகங்கள், மோட்டார் சைக்கிள்களைத் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles