குட்டி தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டம் தயார்: 2,485 வேட்பாளர்கள் போட்டி!

நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 610,117 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை மற்றும், அட்டன், டிக்கோயா ஆகிய நகர சபைகளுக்கும், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை மற்றும் கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்குமான 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களில் 6352 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாருமாக 1500 பேர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

12 சபைகளுக்கும், 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 2,485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

Related Articles

Latest Articles