” வரிச்சுமை அதிகரிப்பால் இந்த அரசை விரட்ட வேண்டும் என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் வந்துவிட்டனர். எனவே, ‘சஜித் ஜனாதிபதி – அநுர பிரதமர்’ என்ற கோரிக்கையை ஏற்று எதிரணி கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும்.”
இவ்வாறு சுதந்திர மக்கள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியவை வருமாறு,
” நாட்டு மக்களுக்கு வற் சுமை வழங்கிய ‘வற் தந்தையாக’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார். இவ்வாறு ‘வற்’ வதை கொடுக்கும் அரசை ‘பிளட்’ ( தரைமட்டமாக்க) ஆக்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர்.
இதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். அதற்கான முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம். பேச்சு வெற்றியளித்துள்ளது. மேலும் சில தரப்புகளுடன் பேச்சுகள் நடத்தப்படும்.
எதிர்காலத்தில் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதே எமது நோக்கம். அதற்கான பணியை நாம் முன்னெடுக்கின்றோம். இந்த பலமான பொது எதிரணி கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பனவும் இணைய வேண்டும். சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர் என்ற யோசனையையும் நாம் முன்வைத்துள்ளோம்.” – என்றார்.
