ஜனநாயக தினத்தை முன்னிட்டு சென் ஜோர்ஜ் தோட்டத்தில் பெண்கள் பணிக்குழு தேர்தல்!
செப்டம்பர் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ஜனநாயக தினத்தை முன்னிட்டு, பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் பெண்கள் பணிக்குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இலங்கையின் ஜனநாயக தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு 350 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர்.
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில்,
பரமநாதன் சபினா – தேயிலை அரும்பு சின்னம்,
கோபாலசாமி கோகிலாதேவி – புத்தக சின்னம்,
முருகேஷ் ஜேகதீஸ்வரி – விளக்கு சின்னம்,
பாலையா ஸ்ரீதேவி – பேனா சின்னம்,
வடிவேல் ஈஸ்வரி – தையல் இயந்திர சின்னம்
ஆகிய சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்துதல், ஜனநாயக செயற்பாடுகளில் அவர்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் சமூகத்தின் தேவைகளை பெண்களின் பிரதிநிதித்துவத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்லுதல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் சத்தியமூர்த்தி, ரதிதேவி, பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளும் தேர்தல் நடவடிக்கைகளை நேரில் கண்காணித்தனர்.
இணைப்பாளர்களான ஸ்டீபன் புஷ்பராஜ் சின்னையா முன்பள்ளி ஆசிரியை ஏன் ஜெயகொடி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக இத்தேர்தல் மிகவும் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.










