கனடாவில் நடைபெறும் ஜி – 7 மாநாட்டில் இஸ்ரேல், ஈரான் போர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் இரு தரப்பு சந்திப்புகளின்போதும் இவ்விவகாரம் பற்றி கலந்துரையாடப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றிபெறாது என்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இந்தப் போரில் ஈரான் வெற்றி பெறாது என்று நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மிகவும் தாமதமாகிவிடும் முன்பாக உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்” எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ஜி7 மாநாடு என்பது ஜி8 மாநாடாக ஆக இருந்தது. ஆனால் பராக் ஒபாமாவும் ட்ரூடோ என்ற நபரும் ரஷ்யாவை இதில் சேர்க்க விரும்பவில்லை. அது ஒரு மாபெரும் தவறு என்று நான் கூறுவேன்.
ஏனென்றால் ரஷ்யா இங்கே இருந்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது. அதே போல நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது என்று நான் நினைக்கிறேன்.” எனவும் ட்ரம்ப சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் நாட்டில் உள்ள ராணுவ மையங்கள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கி வருகிறது ஈரான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது.
அதேவேளை, போர் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருந்து வெளியேற நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனினும், வான் எல்லை மூடப்பட்டிருப்பதால் வெளியேறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
300 ஆஸ்திரேலியர்கள் இஸ்ரேலை விட்டும், 350 ஆஸ்திரேலியர்கள் ஈரானை விட்டும் வெளியேற விண்ணப்பித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.