உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில், தேசிய மக்கள் சக்திக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
வடக்கில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பனவே ஆட்சியமைக்க உள்ளன. சில சபைகளில் இரு தரப்புகள் இணைந்தாலும் ஆட்சி அமைக்ககூடிய சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 இடங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 12 இடங்களையும், தேசிய மக்கள்சக்தி 10 இடங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 4 இடங்களை யும், ஈ.பி.டி.பி. 4 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி ஓர் இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் இடத்தையும் பெற்றுள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகர சபைகளிலும் முன்னிலையை அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை பெற்றுக்கொண்டது.
எனினும், சாவகச்சேரி நகர சபையில் அத்தத் தரப்புக்கு 6 இடங்களும், தமிழரசுக்கு ஆறு இடங்களும் கிடைத்துள்ளன.
கோப்பாயில் தமிழரசுக்கு 11 இடங்களும், தேசிய மக்கள் சக்திக்கு ஒன்பது இடங்களும், தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவை தலா ஐந்து இடங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி இரண்டு இடங்களையும், ஒரு சுயேச்சைக் குழு இரண்டு இடங்களையும், மற்றொன்று ஓர் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
வல்வெட்டிதுறை நகர சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஏழு இடங்களையும், தமிழரசு ஐந்து இடங்களையும், ஈ.பி.டி.பி. ஓரிடத்தையும், தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அங்கு காங்கிரஸின் தலைமை வேட்பாள ராக எம்.கே.சிவாஜிலிங்கம் நிறுத்தப்பட்ட போதிலும் அவர் வட்டாரத்தில் போட்டியிடவில்லை.
பட்டியலிலேயே அவர் பெயர் இருந்தது. ஆயினும் வல்வெட்டிதுறை நகர சபையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தரப்புக்கு ஏழு வட்டார வெற் றிகள் மட்டுமே கிடைத்துள்ளன. பட்டியல்வெற்றி கிடைக்கவில்லை.
ஆகவே, சிவாஜி லிங்கம் முதன்மை வேட்பாளராக இருந் தாலும் அவர் நகர முதல்வராவதானால் வட்டாரத்தில் அவரது தரப்பில் வெற்றிபெற்ற ஒருவர் இராஜிநாமா செய்து அவ ருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட உள்;ராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சியின் சிறீ தரன் தலைமையிலான பிரசாரக் குழு துடைத்து வழித்து வென்றிருக்கின்றது.
தனித்து பிரதேச சபைகளை நிர்வகிக்கும் ஆற்றலை தமிழரசு அங்கு பெற்றுக் கொண்டுள்ளது.
வவுனியாவிலும், மன்னாரிலும் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.
வடக்கில் மேலும் சில சபைகளில் முடிவுகள் வெளிவரவேண்டியுள்ளது.
அதேவேளை, கடந்த பொதுத்தேர்தலின்போது வடக்கில் உள்ள யாழ். மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியே வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
