நுவரெலியா மாவட்டத்துக்கு பல்கலைக்கழகத்தை கோரினோமே தவிர, மதுபான சாலைகளை கோரவில்லை என்றும் புதிய மதுபான சாலைகளை அமைக்கும் திட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிட முடியும்.வழக்குகளை தாமதப்படுத்துவதால் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்கின்றார்கள் .சாட்சிகள் மாறிப்போகின்றார்கள்.வழக்குப்பொருட்களும் அழிந்து போகின்றன. சில வழக்குகளில் குற்றவாளிகளும் சாட்சிக்காரர்களும் கூட இறந்து விடுகின்றார்கள். ஆகவே, வழக்குகளை தாமதிப்பதனால் வழக்கு தாக்கல் செய்பவர்கள், சாட்சிக்காரர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படவும் இடமுண்டு.காலம் தாழ்த்தி வழக்குகள் விசாரிக்கப்படுவதால் பணவிரயமும் ஏற்படுகின்றது.
பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. பொதுவாக மலையகப்பகுதி மக்கள் வாழ்க்கை சுமையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
நுவரெலியா மாவட்டத்தை இரண்டு கலால் பிரிவுகளாக பிரித்தால் நுவரெலியா மாவட்டத்தில் 48 மதுபான சாலைகளும் அம்பகமுவ, ஹற்றன் பகுதியில் 64 மதுபானசாலைகளும் என மொத்தமாக 112 மதுபானசாலைகள் உள்ளன.
பெருந்தோட்டப் பகுதியில் வாழும் மக்கள் தங்களுடைய வாழ்க்கை செலவை கொண்டு செல்ல முடியாத நிலையில், தமது வருமானத்தின் ஒரு பகுதியை இந்த மதுபானசாலைகளுக்கு செலவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கும் அப்பால் இப்போது அரசியல்வாதிகளின் அனுசரணையோடு கடந்த வாரம் டயகம பகுதியில் புதிய மதுபானசாலை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதை எதிர்த்து அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.










