பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அற்கையானது, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமையவே, ஜனாதிபதி அலுவலகத்தினால் இதற்குரிய நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நிலவிய 1988 மற்றும் 90 காலப்பகுதியில் பியகம – பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்தமை, காணாமலாக்கியமை தொடர்பில் விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண்பதற்காக 1995 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவால், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
1998 மார்ச் 26 ஆம் திகதி மேற்படி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சந்திரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பரிந்துரைகளும் அமுலாக்கப்படவில்லை.
இந்நிலையில் அல்ஜெசீரா ஊடகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2025 மார்ச் 6 வழங்கிய நேர்காணலையடுத்து பட்டலந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளானது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் பட்டலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டது. அடுத்த மாதம் மீண்டும் விவாதம் இடம்பெறவுள்ளது.
இதற்கிடையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேற்படி அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.










