பதுளை, ஹிங்குருகடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிடிகாபெத்த, மொரட்டுவகம பகுதியிலுள்ள வீடொன்றில் கஞ்சா மற்றும் துப்பாக்கிகளை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று ஹிங்குருகடுவ பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த வீட்டை சுற்றிவளைத்து, பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போது கட்டுத்துப்பாக்கி ஒன்றும் மேலும் ஒரு உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும் 430 கிராம் காய்ந்த கஞ்சாவுடன் ஐந்தடி உயரம் உள்ள ஐந்து கஞ்சா செடிகளும் ஹிங்குருகடுவ பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
58 வயதுடைய ரிடிகாபெத்த மொரட்டுவகம கிராம சேவக பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை 21/02 பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை ஹிங்குருகடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
